பிரபல ராப் பாடகரான வேடன் சிறுத்தைப்பல் மாலை அணிந்திருந்த விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படங்களைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்த நிலையில், கேரள வனத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, அந்த செயினை ரசிகர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கியதாகவும், அதிலிருந்தது உண்மையான சிறுத்தைப்பல்தானா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் வேடன் விளக்கம் அளித்திருந்தார்.
இதையடுத்து, கைப்பற்றப்பட்ட சிறுத்தைப்பல் பரிசோதனைக்காக கொல்கத்தாவில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கையில், அது உண்மையான சிறுத்தைப்பல் என்பதும் 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் விலங்குகளின் உடற்பாகங்களை வைத்திருப்பது கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில், வேடன் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கேரள வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.