மும்பை,
மும்பையை சேர்ந்த பிரபல இந்தி டி.வி. நடிகை அதிதி சர்மா(வயது29). 'கலீரின்', 'யே ஜாது ஹை ஜின் கா', 'ரப் சே ஹை துவா' உள்ளிட்ட டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர். இவர் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காதலித்த நபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் கோரேகாவ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில், நடிகை அதிதி சர்மா மும்பை கோரே காவ் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், "திருமணம் முடிந்த சில நாட்களிலேயே எனது கணவர் எனது ஆடை விஷயத்தில் தேவையில்லாமல் குறை கூறத் தொடங்கினார். சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் என்னுடன் பெரிய அளவில் சண்டை போட்டு வந்தார். கடந்த ஆண்டு முதல் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு, என்னை ஆபாசமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்தார். அதன்பிறகு என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார். இதனால் எனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டது. இதுமட்டுமன்றி, எனது கணவரின் பெற்றோர் என்னுடைய நகைகள் அனைத்தையும் வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டனர். என்னை அவர்கள் தொடர்ந்து கொடுமைப்படுத்தி, துன்புறுத்தி வந்தனர்" என அதில் கூறியிருந்தார்.
இந்தப்புகாரின் பேரில் போலீசார், டி.வி. நடிகையின் கணவர் மற்றும் அவரது மாமனார், மாமியார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.