சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.
பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது. தவெகவின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன. தவெகவுக்கு தற்போது வரை 116 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது ஆதரவை தெரிவித்துள்ளது.விரைவில் விஜய்யின் த.வெ.க. கட்சி ஆட்சியமைக்க உள்ளது.
இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், “போதிய பெரும்பான்மையை நிரூபித்து தவெக தலைவர் விஜய் முதல்வர் ஆவார். நிச்சயமாக அவர் ஆட்சி அமைப்பார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியதிலிருந்து விஜய் நன்றாக இருக்க வேண்டும், கட்சியில் இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும், குறிப்பாக கட்சியில் இருப்பவர்கள் தலைவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவர்கள் எந்த தவறும் செய்துவிட கூடாது என்பதை ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகிறேன்.
தமிழக வெற்றிக் கழத்தின் இத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும், உண்மையான தொண்டர்களாகவும், எம்எல்ஏக்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் அனைவருக்கும் வாழ்க்கை கொடுத்திருக்கிறார் விஜய். அதற்கு அவர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. பல தடைகளை கடந்து ஆட்சிக்கு வர இருக்கிறீர்கள். அதனால், உங்களைச் சேர்ந்தவர்களை நீங்கள் சரியாக வழி நடத்தினால் அடுத்த 5 வருடங்களுக்கு நீங்கள்தான் தலைவர்” என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.