சென்னை,
கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். விஜய், அஜித், சூர்யா, ரஜினி, உதயநிதி, ஆர்யா, ஜீவா, என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் இவர் நகைச்சுவை நடிகராக பணியாற்றி இருக்கிறார். 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சந்தானம், அடுத்தடுத்து ஹீரோவாக ஒப்பந்தமாகி கலக்கி வருகிறார்.
அவரது நடிப்பில் திரையரங்குகளில் வௌயாகி ரசிகர்கள் மத்தியில் சக்கைப்போடு போட்ட திரைப்படம் 'டிடி ரிட்டன்ஸ்'. இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி இருந்தார். இப்படத்தில் சுரபி, மசூம் ஷங்கர், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பிரேம் குமாரே இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். நடிகர் ஆர்யா இப்படத்தை தயாரிக்கிறார். சந்தானத்துடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, கஸ்தூரி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சந்தானம், ஆர்யா மற்றும் செல்வராகவன் ஆகியோர் 'டிடி ரிட்டன்ஸ் 2' படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது 'நெக்ஸ்ட் லெவல்' என்று ட்வீட் போட்டுள்ளனர். இது இப்படம் தொடர்பான அறிவிப்பாக இருக்கும் என்றும் இந்த படத்தின் டீசர் குறித்த அப்டேட்டாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.