இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதை பெற உள்ள கவிப்பேரரசு வைரமுத்துவை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (ம.தி.மு.க.) பொதுச்செயலாளர் வைகோ இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, வைரமுத்துவுக்கு பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கி தனது பாராட்டுகளை வைகோ தெரிவித்தார். மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
சந்திப்பின் போது பேசிய வைகோ, "“உங்களுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாள் இன்னும் எண்ணற்றப் பிறைகளைக் காணும் வகையில் நீங்கள் முழுமையான உடல்நலனோடும், கவிதையும், காவியமும் படைக்கும் ஆற்றலோடு நெடுங்காலம் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன். உங்களுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம் ஞானபீட விருதுக்கு புதிய மரியாதையும், பெருமையும் சேர்க்கப்பட்டிருக்கிறது" என்று பாராட்டினார்.
இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை கவிப்பேரரசு வைரமுத்து தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில்,
"டெல்லி
தமிழ்நாடு இல்லத்தில்
வைகோ அவர்கள்
என்னைச் சந்தித்தார்
பூங்கொத்து வழங்கினார்;
பொன்னாடை சூட்டினார்;
பிறந்தநாளுக்கும்
இன்று மாலை பெறவிருக்கும்
ஞானபீடத்துக்கும்
வாழ்த்துத் தெரிவித்தார்
எந்த நிலையிலும்
என்னோடு
பாசாங்கு இல்லாத
பாசம் காட்டுபவர் வைகோ
அவர்
அன்பில் நெகிழ்ந்தேன்;
வாழ்த்தில் மகிழ்ந்தேன்"
என்று தெரிவித்துள்ளார்.