நடிகை சவுகார் ஜானகி மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சவுகார் ஜானகியின் வயது 94. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நடிகை சவுகார் ஜானகி இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், சவுகார் ஜானகி மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எகஸ் தள பதிவில் “ செளகார் ஜானகி, கலைப் பெண்களில் பெருமைக்குரிய பெருமாட்டி
பதின்பருவம் முதல் உதிர்பருவம் வரை நகர்ந்துகொண்டே இருந்த நட்சத்திரம்
400 படங்கள் என்பது இனிவரும் தலைமுறைக்கு வாய்க்காத வரலாறு
பெண்ணினத்தின் காத்திரமான பாத்திரங்கள் அனைத்தையும் நடித்துக்காட்டிய நாயகி
'இரு கோடுகள், புதிய பறவை, படிக்காத மேதை, எதிர் நீச்சல், பாக்கியலட்சுமி, ஒளிவிளக்கு, பெற்றால்தான் பிள்ளையா' இப்படி
எம்.ஜி.ஆர் - சிவாஜி - ஜெமினி என்ற முப்பெரும் கலைஞர்களுக்கும் ஈடுகொடுத்த ஒப்பிலா நடிகை
ரங்கராட்டினம் என்ற ஒருபடத்தில் தவிர அவர் எந்தப் படத்திலும் கவர்ச்சி காட்டியதில்லை
உடலைவிட உடல்மொழியை நம்பினார்
ஆங்கிலத்தைத் தாய்மொழிபோல் பேசும் சில நடிகைகளுள் தலைசிறந்தவர் செளகார் ஜானகி
பத்மபூஷணுக்கே உரிய பத்மஸ்ரீ அவர்
ஆந்திரா இந்தியாவிற்குக் கொடுத்தகொடை முடிந்துவிட்டது
அவர் பூ உடம்பு மறையலாம்;புகழ் உடம்பு மறையாது
அவருக்கு என் அஞ்சலி;கலையன்பர்களுக்கும் குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கல் ” என்று குறிப்பிட்டுள்ளார்.