சென்னை,
தவெக தலைவரும் நடிகருமான விஜய் சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். போட்டியிடுவதற்காக விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகருக்கு ரூ.5 கோடி கொடுத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். விஜய் தனது தந்தைக்கே கடன் கொடுத்து இருப்பதாக இந்த விவகாரம் விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையில், பேட்டி ஒன்றில் எஸ்.ஏ சந்திரசேகர் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
சந்திரசேகர் கூறியதாவது: அக்கவுண்ட் புக்கில் என் அப்பாவுக்கு இவ்வளவு கொடுத்திருக்கிறேன் என்று எழுதியதை தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். உடனே எல்லாரும் அதனை கடன் என தவறாக எழுதி பரப்பி வருகிறார்கள். 200 கோடி சம்பாதிக்கும் ஒரு பிள்ளை அப்பாவுக்கு ஒரு ரூ.5 கோடி கொடுக்க கூடாதா.. அவர் கொடுத்தேன் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். எங்கேயும் கடனாக கொடுத்தேன் என குறிப்பிடவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.