விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தது எனக்கு மட்டுமல்ல, விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கும் கஷ்டமாகவே இருந்ததாக இயக்குநர் வினோத் கூறியுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,
தணிக்கைப் பிரச்னைகளிலிருந்து மீண்டு வருகிற 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் இறுதியான படமென்பதால் உலகளவில் 3,500 திரைகளுக்கு மேல் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் எச். வினோத், “ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்த பின் இப்போது வெளியாகும் வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லை. காரணம், சென்சார் தரப்பிலிருந்தே அதைச் செய்யக் கூடாது எனக் கூறிவிட்டனர். ஆனால், புதிதாகத் தெரிவதற்கான சின்னச் சின்ன விஷயங்கள் இருக்கின்றன. சென்சாரில் நீக்கப்பட்ட சில புதிய காட்சிகள் மற்றும் வசனங்கள் தற்போது படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. எனக்குத் தெரிந்தவரை நிறைய பேர் ஜன நாயகனைப் பார்த்துவிட்டனர். அவர்கள் உறுதியாகத் திரையரங்கம் வருவார்கள் என்பதையும் சொல்ல முடியவில்லை.
கடைசி 30 நிமிடங்கள் மிகவும் முக்கியமான மற்றும் சீரியஸான கருத்துகளைக் கொண்டதாக இருக்கும். ஆனால், என் வேண்டுகோள் என்னவென்றால், இது ஒரு கமர்சியல் திரைப்படமோ இல்லை தவெக கட்சியைப் புகழும் படமோ இல்லை. இப்படம் ஒரு நல்ல அரசியலைப் பேசுகிறது. அதனால், ரசிகர்கள் இப்படத்தை இணையத்தில் பார்த்திருந்தாலும் திரையரங்குகளில் வந்தும் பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன். மேலும், இத்திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தது எனக்கு மட்டுமல்ல, விஜய் சார் மற்றும் தயாரிப்பாளருக்கும் கஷ்டமாகவே இருந்தது. ஏனென்றால், விஜய் சார் என்றாலே குழந்தை ரசிகர்கள் அதிகம். அவர்களால் திரையரங்கம் வர முடியாது என்பது வருத்தமானது.
‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கைக் குழுவின் சான்றிதழ் தாமதமானதால், திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை. அதுமட்டுமல்லாமல், படம் இணையத்தில் கசிந்த சம்பவமும் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தச் சூழலில் விஜய் சாரும் மிகவும் வருத்தமடைந்தார். ஆனால் என்னை உடனே தொடர்புகொண்டு, ‘கவலைப்படாதீங்க... எல்லாம் சரியாகிவிடும். இப்படிப்பட்ட பிரச்சினைகள் சினிமாவில் நடக்கக்கூடியதுதான். இதையும் நாம் சேர்ந்து சமாளிப்போம்’ என்று ஆறுதல் கூறி தைரியம் அளித்தார்.
‘ஜன நாயகன்’ திரைப்படம் 200% விஜய் சாருக்கான மாஸ் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. . அவர் முதல்வராவார் என நான் நினைக்கவில்லை. நான் மட்டுமல்ல பலரும் அவரைக் குறைவாக மதிப்பிட்டுவிட்டோம். அவர் மக்கள் மீது வைத்திருக்கிற அக்கறையும் மக்கள் இவர் மீது வைத்திருக்கும் அன்பும் இப்போது பிரம்மாண்டமாகத் தெரிகிறது” என கூறியுள்ளார்.