திரைப்பட இயக்குநரான கிருத்திகா உதயநிதி, தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், பின்னர் ‘காளி’ திரைப்படத்தையும், ‘பேப்பர் ராக்கெட்’ இணையத் தொடரையும் இயக்கி கவனம் பெற்றார்.
அண்மையில் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவான ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தை இயக்கியிருந்த கிருத்திகா உதயநிதி, தற்போது புதிய படத்திற்காக முன்னணி நடிகருடன் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.
தகவல்களின்படி, கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இந்தப் படம், வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய கூட்டணியில் இணையவுள்ளார் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உறுதியானால், விஜய் சேதுபதி - கிருத்திகா உதயநிதி - ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் கூட்டணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.