சினிமா செய்திகள்

கருத்து வேறுபாட்டால் கைவிடப்பட்ட விஷ்ணு விஷாலின் புதிய படம்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருந்த புதிய படம் கைவிடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தான் நடிக்க இருந்த புதிய படம் கைவிடப்படுவதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர்ந்து, பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் , லால் சலாம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் அவரை வைத்தே இயக்கிய 'ராட்சசன்' திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார். ராம் குமார் இயக்கத்தில் 3-வது முறையாக விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘இரண்டு வானம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வரும் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விஷ்ணு விஷாலின் அறிக்கை

இந்நிலையில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தான் நடிக்க இருந்த புதிய படம் கைவிடப்படுவதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.

அதில் “கடந்த சில நாட்களாக, இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் நாள் அடுத்ததாக பணியாற்றவிருந்த படம் குறித்து பல்வேறு தகவல்களும், யூகங்களும் வெளியாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், உண்மையில் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தெளிவுபடுத்துவது எனது கடமை என்று நினைக்கிறேன். அவர்களும் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்

இந்தப் படத்தை கடந்த ஒரு வருடமாக மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த பத்து மாதங்கள இந்தப் படத்திற்காக தீவிரமாக தயாராகியும் வந்தேன். ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. இந்தப் படத்தை தொடங்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால், சமீபத்தில் இந்தப் படத்தின் இயக்குநருடனான கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகள் மற்றும் பட்ஜெட் தொடர்பான சிக்கல்கள் ஆகியவை ஏற்பட்டது.

உண்மையில், தற்போது திரைத்துறை எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால்களில் பட்ஜெட் பிரச்சனையும் ஒன்று என்பதை திரைத்துறையினர் அனைவரும் அறிவர். இந்தப் படத்தை சாத்தியமாக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும், இந்தப் படத்தை இனி தொடர வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது எனக்கும் அருண்ராஜா காமராஜு க்கும் எளிதான முடிவு அல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருந்தாலும், இந்தப் படத்திலிருந்து நாங்கள் இருவரும் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய எதிர்கால முயற்சிகள் அவத்தும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள், அதற்குரிய காலத்தில் நடைபெற்று முடிவுக்கு வரும். எப்போதும் போல. அடுத்து என்ன காத்திருக்கிறது என்பதை நினைத்து நான் உற்சாகமாக இருக்கிறேன். ஆனால், ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் என்ற பொறுப்பையும் ஏற்றிருக்கும் நிலையில், சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த முடிவும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

தற்போது, எனது கவனம் எனது அடுத்த வெளியீடான ‘இரண்டு வானம்’ படம் மீதும், எனது சகோதரரின் Yellow Yellow Dirty Fellow திரைப்படத்தின் மீதும் உள்ளது. அதே நேரத்தில், மிகவும் தனித்துவமானமான ஒரு விஷயத்திலும் பணியாற்றி வருகிறேன். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் வெளியிடவுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

விஷ்ணு விஷால்" என அறிக்கை வெளியிட்டு தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். இதே போல அருண் ராஜ் காமராஜ் அவரது தரப்பு விளக்கத்தை வெளியிடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.