சென்னை,
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார்.
சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவும், நவின் நூலி படத்தொகுப்பும் மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்தில் வெளியான படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், படம் வெளியாகும் முன்பே ரூ.300 கோடிக்கும் அதிகமான ப்ரீ-ரிலீஸ் வணிகத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'கருப்பு' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுவே படம் வெளியாகும் முன்பே இத்தகைய மிகப்பெரிய ப்ரீ-ரிலீஸ் வணிகத்தை எட்ட முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.