சென்னை,
சென்னையில் நடந்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பகத் பாசில், "எப்போதும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். அந்த வகையில், 'பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படமும் எங்களுக்கு மிகவும் சிறப்பான படமாகும்." என்றார்.
‘பிரேமலு’ பட கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், ஷியாம், சங்கீத் பிரதாப், வினய் போர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் ஆகியோர் ‘பாவனா ஸ்டுடியோஸ்’ சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்ட ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் வருகிற 4 ஆம் தேதி தமிழில் வெளியாகவுள்ளது. அதனை முன்னிட்டு சமீபத்தில் தமிழ் டிரெய்லரை வெளியிட்டனர். இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. தற்போது இந்த படத்திற்கான புரமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், சென்னையில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பகத் பாசில், "வணக்கம் சென்னை! முதலில், எங்கள் படக்குழு சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. எப்போதும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். அந்த வகையில், 'பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படமும் எங்களுக்கு மிகவும் சிறப்பான படமாகும்.
இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்க வேண்டும். இது மிகவும் அழகான மற்றும் சிறப்பான திரைப்படம். நல்ல திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில், இப்படம் உலகம் முழுவதும் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் பிரேமுடன் நான் இணைந்து பணியாற்றியுள்ள அடுத்த தமிழ்த் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. அப்போது மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என நம்புகிறேன்." என்று பகத் பாசில் பேசியுள்ளார்.