திருவனந்தபுரம்,
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.
கருப்பு திரைப்படம் மே 14ம் தேதி (நாளை) வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கருப்பு படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி, "கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. எங்கள் மாநிலத்தில் பல கட்சிகளில் இருந்தவர்கள் முதலமைச்சராக வர முயற்சித்தார்கள். ஆனால் உங்கள் மாநிலத்தில் ஒரே கட்சியிலேயே பலர் முதலமைச்சராக வர முயற்சிக்கிறார்கள். எங்களுக்கு ஒரு நல்ல முதலமைச்சர் கிடைத்திருக்கிறார். உங்களுக்கும் ஒரு நல்ல முதலமைச்சர் கிடைப்பார் என்று நம்புகிறேன்" என்றார்.