சென்னை,
நடிகை பிரிகிடா-நடிகர் ஆனந்த் ராம் தம்பதியினரின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
‘ஆஹா கல்யாணம்’ வெப் சீரிஸில் ‘பவி டீச்சர்’ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரிகிடா. விஷால் நடித்த ‘அயோக்யா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து ‘வர்மா, மாஸ்டர், வேலன், இரவின் நிழல், கருடன், கோழிப்பண்ணை செல்லதுரை, மார்கன், இட்லி கடை, ஹாட் ஸ்பாட் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் பகல்’ படத்திலும் பிரிகிடாவின் நடிப்பு பலரது கவனத்தை ஈர்த்தது.
இதற்கிடையே, ‘மீசைய முறுக்கு’, ‘நண்பன் ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஆனந்த் ராமை பிரிகிடா காதலித்து வந்தார். ஆனந்த் ராமின் பிறந்தநாளன்று சமூக வலைதளப் பதிவு மூலம் தனது காதலை பிரிகிடா வெளிப்படுத்தியிருந்தார்.
நீண்டகாலமாக காதலித்து வந்த இருவருக்கும் கடந்த ஜூலை மாதம் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த புகைப்படங்களை பிரிகிடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், பிரிகிடா மற்றும் ஆனந்த் ராம் நேற்று திருமணம் செய்து கொண்டனர். திருமண புகைப்படங்களை பிரிகிடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்! எங்களுக்குக் கிடைத்த அனைத்து ஆசிகளுக்கும் நன்றி. நெகிழ்ச்சியில் திளைக்கிறோம்” என அவர் பதிவிட்டுள்ளார். திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பிரிகிடாவின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.