சினிமா செய்திகள்

40 ஆண்டுகள் பயன்படுத்தி வந்த இடத்தில் ஒரு நாள் தியானம் செய்ய இளையராஜாவை ஏன் அனுமதிக்க கூடாது? ஐகோர்ட்டு கேள்வி

40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தில் ஒரு நாள் தியானம் செய்ய இளையராஜாவுக்கு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? என்று பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

தினத்தந்தி

சென்னை:

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கு ரிக்கார்டிங் தியேட்டராக பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த அரங்கை வேறு தேவைக்கு பயன்படுத்த பிரசாத் ஸ்டூடியோ முடிவு செய்தது. அதனால் இடத்தை காலி செய்ய இளையராஜாவை வலியுறுத்தியது. இதையடுத்து இரு தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தநிலையில், இளையராஜா சென்னை ஐகோர்ட்டில், ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், பிரசாத் ஸ்டூடியோவில் இத்தனை ஆண்டுகள் இசையமைத்த அரங்கில் ஒரு நாள் சென்று தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். கைப்பட எழுதிய இசை கோப்புகள், இசை கருவிகள், தனக்கு கிடைத்த விருதுகள் ஆகியவை அங்கு உள்ளது. அதை எடுத்துக்கொள்ள அனுமதிக்க ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது, பிரசாத் ஸ்டூடியோ சார்பில் மூத்த வக்கீல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, இளையராஜா பயன்படுத்திய இடத்தில் தற்போது மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு இளையராஜா வைத்திருந்த அனைத்து பொருட்களும் வேறு ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதை அவர் எப்போது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். ஆனால், தியானம் செய்ய அனுமதிப்பது குறித்து ஸ்டூடியோ உரிமையாளர்களிடம் கேட்டு தெரிவிக்கிறேன் என்றார்.

அதற்கு நீதிபதி, எதிரியையும் உபசரிக்கும் பண்பு கொண்ட தமிழ் மண்ணில், 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இடத்தில் ஒருநாள் தியானம் செய்ய இளையராஜாவிற்கு உரிமை உள்ளதா? இல்லையா? என்பதை தாண்டி, நீண்ட கால பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காக ஏன் இளையராஜாவை ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி அதற்குள் பிரசாத் ஸ்டூடியோ தரப்பிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு