பின்னணி பாடகியாக தனது குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் 'ஏனோ பெண்ணே...', 'காதல் கண்மணி...', 'அப்படி பாக்கா தடி...' உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாயாவின் சகோதரியும் ஆவார். இதுதவிர ஓரிரு படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் ஸ்வாகதா கிருஷ்ணன் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீது கடந்த மாதம் பாலியல் புகார் வீசி அதிர்ச்சி கொடுத்தார்.
அதில், "பிரபல இசையமைப்பாளரிடம் நான் பணியாற்றிய காலத்தில் தனது ஸ்டூடியோவில் வைத்து என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். என்னை போல பல பெண்களை அப்படி வீடியோ எடுத்து பார்த்து ரசிப்பார். அந்த இசையமைப்பாளரின் இந்த செயல்கள் எல்லாமே அவரது மனைவிக்கும் தெரியும்", என்று குறிப்பிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.
ஸ்வாகதா குறிப்பிட்ட அந்த இசையமைப்பாளர் யார்? என்று திரையுலகினர் தாண்டி ரசிகர்களும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், ஸ்வாகதா மீண்டும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
இந்த புதிய பதிவில், "அனைவருமே அது யார்? என்று தெரிந்துகொள்ள இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் சேர்ந்து அவதூறு வழக்குக்கான செலவை ஏற்பதாக இருந்தால் அவரது பெயரை சொல்கிறேன். அந்த நபருக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க சட்டப்படி போராடுகிறேன்”, என்று குறிப்பிட்டுள்ளார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.