சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு, ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், தனது 300-வது திரைப்படமான 'அர்ஜுனன் பேர் பத்து' மூலம் மீண்டும் கதாநாயகனாக ரசிகர்களை சந்திக்கவுள்ளார்.
அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கியுள்ள 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரும், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய யோகி பாபு, சினிமாவில் வாய்ப்பு பெறுவது எவ்வளவு கடினம் என்பதை தனது அனுபவத்துடன் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், "வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமல்ல, சென்னையில் பிறந்து வளர்ந்தவர்களுக்குக் கூட சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். திரைத்துறையில் 24 ஆண்டுகள் பயணித்த அனுபவத்தின் மூலம் இதை உணர்ந்திருக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "2016-லேயே நயன்தாராவுடன் நடித்துவிட்டேன். எந்த ஹீரோயின் நடிக்கிறார் என்பது முக்கியமில்லை. எனக்கு எப்போதும் கதைதான் முக்கியம். மக்கள் என்னிடம் எதிர்பார்ப்பது காமெடியைத்தான். அதுதான் எனக்கு சோறு போட்டது. அதனால் வாழ்நாள் முழுவதும் காமெடி கதாபாத்திரங்களை பெருமையுடன் செய்து கொண்டே இருப்பேன்.
300 படங்களை நெருங்கிவிட்டேன். ஆனால், கமல்ஹாசன் சாருடன் மட்டும் இன்னும் இணைந்து நடிக்கவில்லை. விரைவில் அந்த வாய்ப்பும் கிடைக்கும் என்று நம்புகிறேன். நல்ல கதைகள் இருந்தால் புதிய இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
யோகி பாபுவின் இந்த பேச்சு, திரைத்துறையில் சாதிக்க போராடும் இளம் கலைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்துள்ளது.