பெங்களூரு,
'கேஜிஎப் சாப்டர் 2' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் 'டாக்சிக்'. பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இந்த அதிரடி ஆக்சன் திரைப்படம், இறுதியாக ஆகஸ்ட் 26-ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள திரையுலகின் முன்னணி பெண் இயக்குநரான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம், இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் உலகளவில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை நயன்தாரா விமானம் மூலம் பெங்களூரு சென்றார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நயன்தாராவிடம், ‘பொதுவாக திரைப்பட புரமோஷன் விழாக்களில் பங்கேற்காத நீங்கள், ‘டாக்சிக்’ படத்தின் விழாவில் பங்கேற்றது ஏன்’ என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நயன்தாரா, ‘படங்களின் புரமோஷன் விழாக்களில் பங்கேற்க கூடாது என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் அது எனக்கு சரிபட்டு வரவில்லை என்பதால் அதில் இருந்து விலகி இருந்தேன். ‘டாக்சிக்’ திரைப்படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. நடிகர் யஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அவருக்காக இந்த விழாவில் பங்கேற்றேன்” என்று தெரிவித்தார்.