சென்னை,
நடிகரும, தமிழக முதலமைச்சருமான விஜய்யின் ஆதரவாளர்களை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வரும் நிலையில், அதற்கு நடிகை மீஷா கோஷல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தங்களுக்கு பிடித்த தலைவரின் திரைப்படத்தை பார்ப்பதும், அவரை ஆதரிப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை என்றும், 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டை மாணவர் போராட்டத்துடன் தொடர்புபடுத்துவது அர்த்தமற்றது என்றும் அவர் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பதிவில் மீஷா கோஷல் கூறியதாவது: "தங்களுக்கு பிடித்த ஹீரோவின் படத்தை பார்ப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமும், உரிமையும் ஆகும். தளபதி விஜயின் ரசிகர்கள் என்பதற்காக எங்கள் மீது ஏன் இத்தனை வெறுப்பு? நாங்கள் அப்படி என்ன தவறு செய்தோம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், "வேறு எந்த ஹீரோவின் ரசிகர்களாக இருந்தாலும் இதுபோல் பேசுவீர்களா? நான் விஜய் ரசிகை என்பதற்காக என்னை சமூக வலைதளங்களில் 'Unfollow' செய்ய விரும்பினால் தாராளமாக செய்துகொள்ளுங்கள், எங்களுக்கு பிடித்த நடிகரை கொண்டாடுவதும், அவரது படத்தை பார்ப்பதும் எங்கள் விருப்பம். அதற்காக எங்களை குற்றவாளிகளைப் போல சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டையும், மாணவர் போராட்டத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்துவது முற்றிலும் அர்த்தமற்றது," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகை மீஷா கோஷலின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சிலர் மாறுபட்ட கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.