பூந்தமல்லி,
சென்னை அண்ணாநகர் எல்.பிளாக்கில் வசித்து வருபவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவரது மனைவி ஜூலி. இவர் கடந்த 6-ந் தேதி தனது கணவரை (பவர்ஸ்டார் சீனிவாசன்) காணவில்லை என்று அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, நிலம் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக பவர்ஸ்டார் சீனிவாசன் தனது மனைவியிடம் கூறாமல் ஊட்டி சென்றிருப்பதும், நிலத்தை பத்திரப்பதிவு செய்ய தனது மனைவி ஜூலியின் கையெழுத்து போட வேண்டி இருந்ததால் அவரையும் ஊட்டிக்கு வரும்படி அழைத்துள்ளதும் தெரியவந்தது.
ஆனால் புகார் கொடுத்த ஜூலி, தனது கணவர் ஊட்டியில் இருப்பதை போலீசாரிடம் தெரிவிக்காமல் ஊட்டிக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து பவர்ஸ்டார் சீனிவாசனை போலீசார் செல்போனில் தொடர்புகொண்டபோது, ஊட்டியில் உள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்து முடித்துவிட்டு சென்னை திரும்பி வந்து விடுவதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதற்கிடையே பவர்ஸ்டார் சீனிவாசன் மர்மநபர்களால் கடத்தப்பட்டதாக தகவல்கள் பரவின.
இந்த நிலையில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் நேற்று ஊட்டியில் இருந்து அண்ணாநகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். தான் சென்னை வந்துவிட்டது குறித்து அவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
இந்த நிலையில், தனது மனைவியை கடத்தி ஊட்டியில் 11 பேர் சிறை வைத்துள்ளனர் என பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய போலீசில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தப்பட்டார் என தகவல்கள் பரவிய நிலையில், அவர் திரும்பி வந்து தனது மனைவி கடத்தி சிறை வைக்கப்பட்டு உள்ளார் என புகார் தெரிவித்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.