சினிமாவில் காமெடியனாக நடித்து வரும் தாடி பாலாஜி, தனியார் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நடிகர் தாடி பாலாஜி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு போஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளார்.
தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது, இந்நிலையில், நித்யா கடந்த மே மாதம் 23 ந்தேதி மாதவரம் போலீசில் புகார் ஒன்று அளித்தார்.அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கபடவில்லை எனக்கூறி சில நாட்களுக்கு முன் நித்யா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் மீது பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனக்கும் நடிகர் பாலாஜிக் கும் திருமணம் நடந்தது. ஒரு மகள் இருக்கிறார். நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. குடித்துவிட்டு வந்து என்னை சித்ரவதை செய்வார்.
அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதை மறைத்து என்னை திருமணம் செய்தார். நான் தினமும் ஜிம்முக்கு போவேன். இதனால் நடத்தையில் சந்தேகப்பட்டார்.
தினமும் நான் வேலைக்கு செல்லும் போதும், ஜிம்முக்கு செல்லும் போதும் என்னை ரகசியமாக பின் தொடர்ந்து கண்காணிப்பார். நான் பணிபுரியும் அலுவலகத்துக்கு குடிபோதையில் வந்து என்னைப் பற்றி பேசி அவமானப்படுத்தினார். இது உயர் அதிகாரிகள் மத்தியில் எனக்கு அவமானமாக இருந்தது.
சமீபத்தில் என்னை அவர் தாக்கினார். இதனால் நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். எனவே கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறி இருந்தார். இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் கணவர் மீது புகார் கூறி நித்யா பேட்டியும் அளித்து இருந்தார்.
நான் இது தொடர்பாக போலீசில் பலமுறை புகார் செய்தும் உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து இருக்கிறேன் என்றார். கமிஷனர் உத்தரவின் பேரில் நித்யாவின் புகார் மாதவரம் போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் போலீசார் தாடி பாலாஜி மீது, பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நித்யா கொளத்தூர் ரெட்டேரி சாஸ்திரி நகரில் வசிக்கிறார். கணவர் தாக்கியதால் அவர் ரெட்டேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினார்.