சினிமா செய்திகள்

“ரஜினிகாந்துடன் நடித்தது பெருமை” - நடிகை திரிஷா மகிழ்ச்சி

பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்தது பெருமை என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு சிம்ரன், திரிஷா என்று 2 ஜோடிகள். திரிஷா பிளாஷ்பேக் கதையில் வருகிறார். அவருக்கு படத்தில் கொஞ்ச நேர காட்சிகள்தான் என்றாலும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக நடிக்க ஒப்புக்கொண்டார். படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

ரஜினியுடன் நடித்த அனுபவம் பற்றி திரிஷா சொல்கிறார்:-

நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. 165 படங்களில் ரஜினி நடித்துள்ளார். அவருடன் பேட்ட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். படப்பிடிப்பில் அவருடன் பழகிய அனுபவங்கள் மறக்க முடியாதவை. மூத்த நடிகர், ஜூனியர் நடிகர் என்று வித்தியாசம் பார்க்காமல் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரியாக பழகுவார்.

அனைவருக்கும் மரியாதை கொடுத்தார். அன்பாகவும் எளிமையாகவும் இருந்தார். ரஜினி குணத்தில் பத்து சதவீதம் இருந்தாலே அவரைப்போல் நல்ல பெயர் எடுக்க முடியும். காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் காலை 6 மணிக்கே அரங்குக்குள் வந்து விடுவார். நேரம் தாண்டியும் படைப்பிடிப்பை நடத்துகிறார்களே என்று சொன்னால் வேலை என்று வந்துவிட்டால் அதை முடித்து கொடுக்க வேண்டும் என்பார்.

இந்த உலகத்தில் அவரைபோல் ஒருவரை பார்க்க முடியாது. பண்பானவர், பந்தா இல்லாத மனிதர். ரஜினியும், கமலும் இவ்வளவு உயரங்களை அடைந்ததற்கு அவர்களின் உழைப்புதான் காரணம். இவ்வாறு திரிஷா கூறினார்.