சினிமா செய்திகள்

யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படம்

யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்துவருகிறார். கடந்த 2009ம் ஆண்டு அமீர் நடிப்பில் வெளியான யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கலகலப்பு (2012), மான் கராத்தே (2014) போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பால் புகழ் பெற்றார். அதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள், ஜெயிலர், கடைசி விவசாயி, மெர்சல், மாஸ்டர் மற்றும் மாவீரன் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். யோகி பாபுவின் 300 ஆவது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ படம் வரும் ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவர் 11 வெவ்வேறு வேடங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் ஆர். கிஷோர் குமார் இயக்குகிறார். அறிமுக இயக்குநரான கிஷோர் குமார் இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

9 லைட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர்கள் அதிதி ரவி, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், நடிகர் யோகி பாபு படத்தின் நாயகன் மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பான் இந்தியா அளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் காமெடி ஆக்சன் கதைகளத்துடன் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றது.

இதுகுறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், “பரபரப்பான காமெடி ஆக்சன் திரில்லரான இப்படத்தில் நாயகன் முதல் வில்லன் வரை மொத்தம் 11 பாத்திரங்களை ஏற்று யோகி பாபு நடிக்கிறார். இதில் இரட்டையர் வேடங்களும் அடங்கும். இது மட்டுமில்லாது, பல்வேறு மொழிகளை பேசியும் நடிக்கிறார். மிகவும் சவாலான இப்பணிக்காகக் கடும் உழைப்பை அவர் வழங்கி வருகிறார்” என்று கூறியுள்ளார்.