சினிமா செய்திகள்

“ஊர் பேசுவதை காதில் வாங்கினால் முன்னேற முடியாது” - அட்லீ பரபரப்பு பேச்சு

‘பத்தா’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் அட்லீ கலந்து கொண்டு பேசினார்.

சென்னை,

நடிகர் விஜய் சேதுபதி, விஜய் தொடர்பாக பேசியதாக எழுந்த சர்ச்சையின் பின்னணியில், அதற்கு அட்லீ மறைமுகமாக பதிலளித்திருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘பத்தா’ இசை வெளியீட்டு விழா

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 - சினி1 ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. திரைப்படம் அக்டோபர் 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ‘பத்தா’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தயாரிப்பாளர் அட்லீ, விஜய் குறித்து பேசிய கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

“விஜய் இல்லையென்றால் எனக்கு வாய்ப்பே கிடையாது”

விழாவில் பேசிய அட்லீ, தனது திரையுலக பயணத்தில் நடிகர் விஜயின் பங்களிப்பு குறித்து குறிப்பிட்டார். தான் தற்போது அடைந்துள்ள வளர்ச்சிக்கு தனது உழைப்பு முக்கிய காரணமாக இருந்தாலும், விஜய் வழங்கிய வாய்ப்புகளும் தனது பயணத்தில் முக்கிய பங்கு வகித்ததாக அவர் கூறினார். ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் தனக்கு அடையாளம் கிடைத்ததாகவும், அதன்பிறகு விஜய் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

மேலும், நடிகர் ஷாருக்கானை வைத்து திரைப்படம் இயக்குமாறு விஜய் தன்னை ஊக்கப்படுத்தியதாகவும், அவரது ஆலோசனைப்படி உருவான அந்த திரைப்படம் தனது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அட்லீ கூறினார்.

“விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்”

சமூக வலைதளங்களில் வெளியாகும் பல்வேறு கருத்துகளை வைத்து வாழ்க்கையை அமைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அட்லீ தெரிவித்தார். யார் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், தங்களது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். “ஊர் வாயை அடக்க முடியாது” என்ற பழமொழியை குறிப்பிட்ட அட்லீ, பிறரின் கருத்துகளை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தால் முன்னேற முடியாது என்றார்.

“அரசியல் அனைவருக்குமானது”

தொடர்ந்து அரசியல் குறித்தும் பேசிய அட்லீ, அடுத்த தலைமுறை அரசியலில் விஜய்க்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரிவித்தார். அதேவேளையில், தான் அரசியல்வாதி இல்லை என்றும், தனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது சட்டசபையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த தகவல்கள்கூட குழந்தைகள் அறிந்து கொள்ளும் அளவுக்கு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் கிடைத்து வருவதாகவும் கூறினார். எனவே, “அரசியல் நமக்கானது அல்ல” என்று ஒதுங்கி நிற்க முடியாது என்றும், அரசியல் என்பது அனைவருக்கும் தொடர்புடையது என்றும் அட்லீ தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் விவாதம்

அட்லீயின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, விஜய் தொடர்பாக பேசியதாக எழுந்த சர்ச்சையின் பின்னணியில், அதற்கு அட்லீ மறைமுகமாக பதிலளித்திருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும், விஜய் சேதுபதியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அட்லீ இந்த கருத்துகளை தெரிவித்துள்ளதால், இது தொடர்பாக பல்வேறு விதமான கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT