சினிமா செய்திகள்

'சமூக வலைதளங்களில் அல்ல, பெரிய திரையில் சாதித்து காட்டுங்கள்' - இளம் நடிகர்களை சாடிய இயக்குனர்

இயக்குனர் ரோஹித் ஷெட்டி தற்போதுள்ள இளம் நடிகர், நடிகைகளை கடுமையாக சாடியுள்ளார்.

சென்னை,

பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'சிங்கம் அகெய்ன்'. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும். இப்படத்தில், அஜய் தேவ்கன், அக்சய் குமார், ரன்வீர் சிங், கரீனா கபூர், அர்ஜுன் கபூர், டைகர் ஷெராப் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குனர் ரோஹித் ஷெட்டி தற்போதுள்ள இளம் நடிகர், நடிகைகளை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

'தற்போதுள்ள இளம் நட்சத்திரங்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக உள்ளனர், அது உண்மையான உலகம் இல்லை. அங்கு நம்மை பின்தொடர்பவர்களை பணம் கொடுத்து அதிகரிக்கலாம். ஆனால், அது 2 வருடங்கள் கூட நிலைக்காது. அந்த உலகத்தை விட்டு வெளியே வாருங்கள். சமூக வலைதளங்களில் இல்லாமல், பெரிய திரையில் சாதித்து காட்டுங்கள்' என்றார்.

தொடர்ந்து பேசுகையில், 'இளைய தலைமுறையினருக்கு எனது மிகப்பெரிய அறிவுரை. எந்த வேலையையும் பெரியது அல்லது சிறியது என நினைக்க வேண்டாம். தோல்வியை கண்டு பயப்படாதீர்கள். உங்கள்மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள். என் படங்களான சர்க்கஸ் மற்றும் தில்வாலே பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை என்றாலும், அதற்கு முன்பு நான் இயக்கிய கோல்மால் மற்றும் ஆல் தி பெஸ்ட்க்காக இன்னும் மக்கள் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள். அதுதான் முக்கியம்' என்றார்.

SCROLL FOR NEXT