சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘தக் லைப்’ உள்ளிட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘அரசன்’ படத்தின் புரோமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சமுத்திரகனி, கிஷோர், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, சிம்பு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், தேசிங்கு பெரியசாமி மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கங்களிலும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், ‘டியூட்’ பட இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் சிம்பு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்திஸ்வரன், பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அரசன்’ படத்தை முடித்த பிறகு சிம்பு எந்த இயக்குனரின் படத்தில் நடிக்கிறார் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.