சென்னை,
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து அனாதையாகும் நயன்தாரா, தனது தம்பி யாஷூடன் பணக்கார வீடுகளில் திருடி வாழ்க்கை நடத்தி வருகிறார். நயன்தாரா - யாஷின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்படும் பெரிய டான், தனது கும்பலுடன் இணைத்துக் கொள்கிறார்.
டான் கூட்டணியில் இணையும் நயன்தாரா - யாஷ் அதனைத்தொடர்ந்து பெரிய அளவிலான கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றுகிறார்கள். பெண்கள் என்றாலே பித்துபிடித்து அலையும் யாஷ், தனது முதலாளியின் மகளான தாரா சுதாரியாவை காதலிக்கிறார். இந்த காதலுக்கு தாரா சுதாரியாவின் தந்தையும் பச்சைக்கொடி காட்டுகிறார்.
இதற்கிடையில் அந்த ஊருக்கு வரும் சர்க்கஸ் கலைஞரான கியாரா அத்வானி மீது யாஷூக்கு மோகம் ஏற்படுகிறது. இருவரும் நெருக்கமாக பழகுகிறார். கியாரா அத்வானி கர்ப்பம் அடைகிறார். இந்த சூழலில் யாஷூக்கும், தாரா சுதாரியாவுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு யாஷின் போக்கு தெரியவருகிறது. கியாரா அத்வானி கர்ப்பமாக இருப்பதும் தெரியவர பிரச்சினை வெடிக்கிறது. இதனால் தன்னை வளர்த்த முதலாளிக்கும், யாஷூக்கும் இடையே சண்டை மூள்கிறது.
இதில் யாஷை தாரா சுதாரியா துப்பாக்கியால் சுட்டுவிட, அவரை நயன்தாரா கொன்றுவிடுகிறார். இந்த சூழலில் நயன்தாராவை கியாரா அத்வானி கொன்றுவிட மிகப்பெரிய திருப்பம் உண்டாகிறது. நயன்தாராவை கியாரா அத்வானி கொன்றது ஏன்? யாஷின் நிலை என்ன ஆனது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
யாஷ் அதிரடி விருந்து படைத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் புரிந்துள்ள அவர், கே.ஜி.எப். படத்தை நினைவூட்டுகிறார். பெண் பித்தனாக சுற்றும் அவர், கியாரா அத்வானியுடன் காதல் காட்சிகளில் மட்டும் ரொம்ப பாசம் காட்டியுள்ளார்.
நயன்தாரா மாறுபட்ட கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். அவரது துணிச்சலை பாராட்டலாம். கியாரா அத்வானி அழகும், ஆபத்தும் நிறைந்த நடிகையாக கவனிக்க வைக்கிறார். ருக்மினி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, அமித் திவாரி, சுதேவ் நாயர், பாலாஜி மனோகர், அக்ஷய் ஓபராய் என அனைவருமே நல்ல தேர்வு.
ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிரட்டல். விஷால் மிஸ்ரா, ரவி பஸ்ரூர், தனிஷ்க் பக்சி ஆகியோரின் கூட்டணியில் இசையில் இரைச்சலே அதிகம். யூகிக்க முடியாத கதைக்களம் பலம். திரைக்கதை பல இடங்களில் திசைமாறி விட்டது. வன்முறை காட்சிகள் இவ்வளவு வேண்டாம்.
அதிரடி - ஆக்ஷன் கதைக்களத்தை மட்டுமே நம்பி, லாஜிக் மீறல்களை கவனத்தில் கொள்ளாமல் ஒரு கலவர விருந்து கொடுத்திருக்கிறார், இயக்குனர் கீது மோகன்தாஸ். இடைவேளை காட்சி பெரும் திருப்பம்.