சினிமா விமர்சனம்

“கோல்டு கால்”: சினிமா விமர்சனம்

தம்பிதுரை இயக்கத்தில் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் நடித்த ‘கோல்டு கால்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதிகளாக சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகிய நான்கு பேரும் பணியாற்றுகிறார்கள். வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த நான்கு பேரும் நண்பர்களாகிறார்கள். இதற்கிடையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் நிறுவன உரிமையாளரின் விரோதத்தையும் சம்பாதிக்கிறார்கள். இதற்கிடையே, பிரபல தொழில் அதிபரின் மகன் கடத்தல் வழக்கில் நான்கு நண்பர்கள் மீதும் போலீசாரின் பார்வை திரும்புகிறது.

பயத்தின் பிடியில் நான்கு பேரும் தலைமறைவாக, போலீசார் வலைவீசி தேடுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கவும், தங்கள் மீது விழுந்த பழிகளை நீக்கவும் காணாமல் போன சிறுவனை மீட்க தயாராகிறார்கள். அதில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே மீதி கதை.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய் ஆகியோர் தமிழுக்கு புதியவர்கள் என்றாலும் எதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்கள். தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளா என நான்கு பிரதேசங்களில் இருந்து இவர்களை தேர்வு செய்திருப்பது கதாபாத்திரத்துக்கு பலம் சேர்க்கிறது.

அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேலி லிட்டி, கீர்த்தனா புல்கி ஆகிய நான்கு கதாநாயகிகளும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். நிஷா ஹெக்டேவின் நடிப்பு உயர்வாக இருக்கிறது.

நிறுவனத்தின் மேலாளர், விற்பனை பிரதிநிதிகளின் பயிற்சியாளர் என்று மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் பொருத்தமான தேர்வு. சரவணனின் ஒளிப்பதிவு எளிமை. பிரணவ் கிரிதரனின் இசை இனிமை. காமெடி காட்சிகள் பலம். யூகிக்க முடியும் காட்சிகள் பலவீனம்.

விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வில் நடக்கும் எளிய சம்பவங்களையும், மறக்க முடியாத நிகழ்வுகளையும், இனிமையான அனுபவமாக கொடுத்து கவனிக்க வைத்துள்ளார், இயக்குனர் தம்பிதுரை. இடைவேளையும், கிளைமேக்ஸ் காட்சியும் ரசிக்க வைக்கிறது.

SCROLL FOR NEXT