சினிமா விமர்சனம்

காதலில் குழப்பம்... காமெடியில் கொண்டாட்டம்! - "இதயம் முரளி" திரை விமர்சனம்

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கிய இதயம் முரளி படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

பள்ளி பருவத்தில் பிரீத்தி முகுந்தனை பார்த்ததும் காதலிக்க தொடங்கும் அதர்வா, அந்த காதலை அவரிடம் சொல்ல முடியாமல் தயங்குகிறார். ஒரு கட்டத்தில் காதலை சொல்லப் போகும் நேரத்தில் பிரீத்தி முகுந்தன் இரட்டையர் என்ற உண்மை தெரிய வருகிறது. இதனால் இதுவரை யாரை காதலித்தோம்? என்ற குழப்பத்தில் அதர்வா காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

அதன் பிறகு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் கயாடு லோகர் மீது அதர்வாவுக்கு காதல் ஏற்படுகிறது. அந்த காதலையும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். படிப்பு முடிந்து சொந்த ஊருக்கு கயாடு லோகர் செல்லும்போதும், காதலை சொல்லாமல் மனதுக்குள்ளையே பூட்டி வைக்கிறார் அதர்வா.

இப்படி நேசித்த பெண்களிடம் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அதர்வாவுக்கு, பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி முடிக்கிறார் அவரது தாய்மாமன் நட்டி நட்ராஜ். திருமணத்துக்கு முன்பாக மனதில் பூட்டி வைத்த காதலை சொல்லியாவது விட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார் அதர்வா.

அதர்வா தன் நேசித்த பெண்களிடம் காதலை சொன்னாரா? தனக்காக பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா? என்ன நடந்தது? என்பதே கலகலப்பான மீதி கதை.

கலகலப்பான கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார், அதர்வா. காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் இடங்களில் எதார்த்த நடிப்பை கொட்டியுள்ளார். சிறிது நேரமே வந்தாலும் நினைவில் நிற்கும் படியான நடிப்பை கொடுத்துள்ளார் கயாடு லோகர். அதிரடி தாண்டி காதல், எமோஷனல் நடிப்பும் தனக்கு வரும் என்று நிரூபித்திருக்கிறார் பிரீத்தி முகுந்தன்.

நட்டி நட்ராஜ் இருப்பு படத்துக்கு சிறப்பு. 'பரிதாபங்கள்' சுதாகரின் காமெடி அத்தனையும் சரவெடி. அஞ்சு குரியன், ஜொனிதா காந்தி, ரக்சன், தமன், நிஹாரிகா, ஏஞ்சலின், டிராவிட் செல்வம் உள்ளிட்டோரின் பங்களிப்பும் ரசிக்க வைக்கிறது. பகத் பாசில் மற்றும் சின்னி ஜெயந்த் ஆகியோரின் நடிப்பும் பக்கபலமாக இருக்கிறது.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. தமனின் இசை ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையும் பிரமாதம். கலகலப்பான காட்சிகள் படத்துக்கு பலம். இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

காதல் எமோஷனல் கலந்த கதையில் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அனைத்து தரப்பினரையும் ரசிக்க செய்துள்ளார் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன்.