சினிமா விமர்சனம்

பெண்ணியமா, பிற்போக்குத்தனமா? “கட்டா குஸ்தி - 2” - சினிமா விமர்சனம்

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

குழந்தை பிறந்த பின்பும் தனது மனைவி ஐஸ்வர்யா லட்சுமியை மல்யுத்த வீராங்கனையாக விஷ்ணு விஷால் சாதிக்க வைத்ததுடன் ‘கட்டா குஸ்தி’ முதல் பாகம் முடிவடைந்தது. அதிலிருந்து புதிய கதை தொடங்குகிறது.

ஒருபுறம் மல்யுத்த போட்டிக்கான பயிற்சி இன்னொரு புறம் அந்த மல்யுத்தத்தால் கிடைத்த அரசு வேலை என பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்காக 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' ஆக மாறுகிறார் விஷ்ணு விஷால். ஐஸ்வர்யா லட்சுமியின் தொடர் வெற்றியை பார்த்து பொறாமைப்படும் பயிற்சியாளர் அவரை வீழ்த்த சதி வேலை செய்கிறார். இதில் தெரிந்தும், தெரியாமலும் விஷ்ணு விஷாலும் சிக்கிக் கொள்ள ஐஸ்வர்யா லட்சுமியின் முக்கியமான தோல்விக்கு காரணமும் ஆகிவிடுகிறார். இதனால் சண்டை வெடிக்க கணவன் - மனைவி பிரிகிறார்கள்.

விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்லும் தம்பதிக்கு, யார் வசம் குழந்தை இருப்பது என்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. விவாகரத்து வேண்டும் என்று ஐஸ்வர்யா லட்சுமியும், விவாகரத்து வேண்டாம் என்று விஷ்ணு விஷாலும் விடாப்படியாக நிற்கிறார்கள். அப்போது நீதிமன்றத்தில் முக்கிய திருப்பம் ஒன்று அரங்கேறுகிறது. அது என்ன? பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினாரா? என்பதே கலகலப்பான மீதி கதை.

முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் கலாட்டா நடிப்பால் கவர்ந்திருக்கிறார் விஷ்ணு விஷால். அவர் செய்யும் கலாட்டாக்களும் ரசிக்க வைக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமியின் கதாபாத்திரத்தில் கணம் வியப்பளிக்கிறது. சிறப்பான அவரது நடிப்புக்கு அடடா சொல்லலாம்.

கருணாஸ் - லிசி ஆண்டனி ஜோடி ரசிக்க வைக்கிறார்கள். முனீஸ்காந்த், யோகிபாபுவின் காமெடியும் ஓகே ரகம். 'ராஜமாதா' ரம்யாகிருஷ்ணனின் சிறப்பு தோற்றம் ஆச்சரியம். காளி வெங்கட் கருணாகரன் உள்ளிட்டோரும் நல்ல தேர்வு. கஜராஜின் 'டார்க் காமெடி'க்கு கைத்தட்டல் நிச்சயம்.

குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாரா கலக்கிவிட்டார். கே எம் பாஸ்கரனின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டானின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன.

பாலின அரசியல், சமத்துவம் குறித்த விவாதங்கள் மிகவும் பரவலாக இருக்கும் இந்த 2026-ஆம் ஆண்டில், அதன் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தை விட இது ஒரு படி மேலே சென்று சமத்துவம் விஷயங்களை பேசியிருக்க வேண்டும். ஆனால் 80, 90-களில் வெளியான படங்களை போல எடுத்திருக்கிறார் இயக்குநர்.

கலகலப்பான காட்சிகள் படத்துக்கு பலம். பல காட்சிகளை யூகிக்க முடிகிறது. சுவாரசியமும், கலகலப்பும் நிறைந்த காட்சிகளாக குடும்பங்கள் ரசிக்கும்படியான படத்தைக் கொடுத்து கவனம் ஈர்த்து இருக்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு.