சினிமா விமர்சனம்

"மெல்லிசை" திரைப்பட விமர்சனம்

இயக்குனர் திரவ் இயக்கத்தில் ‘ஆடுகளம்' கிஷோர் நடித்துள்ள "மெல்லிசை" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக ‘ஆடுகளம்' கிஷோர் பணியாற்ற, அவரது மனைவி சுபத்ராவும் அதேபள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். இதற்கிடையில் தனது செல்ல மகளின் விருப்பத்துக்காக டி.வி. நடத்தும் பாட்டு போட்டியில் கிஷோர் கலந்து கொள்கிறார். பாட்டு நிகழ்ச்சிக்காக அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு போடும் கிஷோர், நிர்வாகத்தினரின் வெறுப்பை சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் வேலையும் பறிபோக, நிகழ்ச்சியில் இருந்தும் நிராகரிக்கப்படும் கிஷோருக்கு, வாழ்க்கை வெறுப்பாகிறது.

பின்னர் 'வைல்டு கார்டு' சுற்று மூலம் மீண்டும் நிகழ்ச்சியில் கால் பதிக்கும் கிஷோரின் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறுகிறது. இதனால் அவரது குடும்பமே பாதிக்கப்படுகிறது? அது என்ன? என்பதே படத்தின் கதை. வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் ஆடுகளம் கிஷோர் எதார்த்தமான நடிப்பை கொட்டியுள்ளார். நல்லவேளை மற்ற நடிகர்கள் போல ‘டூயட்', ‘பைட்' என கேட்கவில்லை. இயல்பான நடிப்பால் சுபத்ரா கவர்கிறார். கணவனுக்காக பள்ளி நிர்வாகத்துடன் அவர் போராடும் காட்சிகளில் துடிப்பு.

கிஷோர் - சுபத்ரா தம்பதியின் மகனாக ஜஷ்வந்த் மணிகண்டன், மகளாக தனன்யா வர்ஷினி நடிப்பு சிறப்பு. குழந்தைகளாகவும், 7 ஆண்டுகளுக்கு பிறகு பருவ வயதிலும் அவர்களையே காட்டியிருப்பது நம்பிக்கை தருகிறது. தேவராஜ் புகழேந்தியின் ஒளிப்பதிவிலும், சங்கர் ரங்கராஜன் இசையிலும் ஏதோ ‘மிஸ்ஸிங்'.

ஒரு நடுத்தர குடும்பத்தின் சூழலை காட்சி படுத்தியிருக்கும் விதம் அழகு. ‘லாஜிக்' மீறல் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். பாட்டு போட்டிக்கான காட்சிகளிலும் உயிர்ப்பில்லை. 'டப்பிங்'கிலும் நேர்த்தியில்லை. இளைய அரசரின் வம்பு எதற்கு? என்ற பயத்தில் ஏதேதோ வரிகளை போட்டிருப்பது ஏன்? தன்னம்பிக்கை பாடலுக்கும் தாம்பத்ய காட்சிக்கும் என்ன சம்பந்தம் பாஸ்? எதார்த்தமான காட்சிகளை கொண்டு ஒரு அழகான குடும்பத்தின் வாழ்வியலை காட்சிப்படுத்தி கவனம் ஈர்த்திருக்கும் இயக்குனர் திரவ், சில குளறுபடியான காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

மெல்லிசை - கேட்கவில்லை.