திருமணமாகி புகுந்த வீட்டுக்கு பெண்கள் செல்லும் வழக்கம் மாறி, ஆண்கள் செல்லும் நிலை வந்தால் என்ன ஆகும்? என்பதை சொல்லும் கதை ‘பியார் பிரேமா கல்யாணம்’.
எதிர்பாராத ஒரு சந்திப்பில் சான்வி மேகனாவை காதலிக்க தொடங்கும் இளன், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்கிறார். திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் செல்ல சான்வி மேக்னா மறுக்கிறார். சான்வி மேகனாவை திருப்திப்படுத்த அவரது வீட்டுக்குப் பெட்டி படுக்கையுடன் செல்கிறார் இளன். ஆரம்பத்தில் இளனை பார்த்து பார்த்து கவனிக்கும் சான்வி மேக்னாவின் தாயார் ராதிகா சரத்குமார். ஒரு கட்டத்தில் இளனை வீட்டோடு மாப்பிள்ளையாக்கி திணறடிக்கிறார்.
இதையடுத்து ராதிகா-சான்வி மேக்னா இடையே சில பிரச்சினைகளைத் தூண்டி விடுகிறார் இளன். இளனை அங்கிருந்து மீட்க அவரது தாயார் கீதா கைலாசம் முயற்சிக்கிறார். அதே வேளை சான்வி மேக்னாவின் மனதை மாற்ற இளனும் துடிக்கிறார். இறுதியில் என்ன ஆனது? யாருடைய முயற்சி வெற்றி பெற்றது? என்பதே கலகலப்பான மீதி கதை. இயக்குநர் பிம்பத்தை தாண்டி, நடிகராகவும் கவனம் ஈர்த்துள்ளார் இளன். வெகுளித்தனமான அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. கதாபாத்திரத்துடன் இன்னும் ஒன்றி நடித்திருந்தால் சான்வி மேக்னா ஜொலித்திருப்பார். அடாவடி மாமியாராக ராதிகா சரத்குமார் கலக்கியுள்ளார். அவ ரது நடிப்பு படத்துக்கு அலங்காரம். எம்.எஸ்.பாஸ்கர்,கீதா கைலாசம், இளங்கோ குமரவேல் உள்ளிட்டோரின் நடிப்பு சிறப்பு. செந்தில், யோகிபாபு, மாறன் உள்ளிட்டோரின் காமெடிக ளுக்கு ஓரளவு சிரிக்கலாம்.
தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் 'கலர்புல்'. யுவன் சங்கர் ராஜாவிடம் நிறைய எதிர்பார்த்தோம். கலகலப்பான மற்றும் புதுமையான காட்சிகள் படத்துக்குப் பலம். திரைக்கதையில் இன்னும் வேகம் இருந்திருக்கலாம். 2-ம் பாதியில் நீளமான பல காட்சிகளைத் தவிர்த்து இருக்கலாம். லாஜிக் மீறல்களும் ஏராளம்.
காதல் தாண்டி திருமணத்திற்கு பின்னால் ஏற்படும் உறவு சிக்கல்கள். குடும்பத்தினரின் மன நிலை, பெண்களின் எதிர்பார்ப்புகள் போன்ற விஷயங்களை அழகாக கையாண்டு வித்தியாச மான கதைக்களத்தில் படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார் இளன்.
பியார் பிரேமா கல்யாணம் உஷாரய்யா உஷாரு....