கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு கிராமத்தில் சாத்தான் வழிபாட்டில் மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். நினைத்தது நடக்க ஆடு, மாடு, கோழி தாண்டி மனிதர்களையும் நரபலி கொடுக்கிறார்கள். பின்னர் ஒருகட்டத்தில் இந்த கொடூரம் அடங்கி கிராமம் சாதாரண நிலைக்கு வருகிறது.
இந்தசூழலில் ஐராவின் தாயார் மோனபத்ரே, திடீரென்று விசித்திரமாக நடந்துகொள்கிறார். தன்னை தானே தாக்கி காயமடைகிறார். இதையடுத்து விஷயம் கேள்விப்பட்டு ஐராவின் காதலரான எப்.ஜே. வீட்டுக்கு வருகிறார். அப்போது அங்கே கொடூரமான ஒரு உருவத்தை பார்க்கிறார். அதன்பிறகு எப்.ஜே.வின் நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது.
அதேவேளை ஊரில் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அசம்பாவிதங்கள் அரங்கேற தொடங்குகிறது. மர்ம மரணங்கள் அதிகரிக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? எப்.ஜே. நிலை என்ன ஆனது? பிரச்சினைகள் தீர்ந்ததா, இல்லையா? என்பதே திகிலூட்டும் மீதி கதை.
இயல்பான நடிப்பால் எப்.ஜே. கலக்கியுள்ளார். அவரது காதலியாக வரும் ஐராவின் நடிப்பும் சிறப்பு. ஆபத்தமான அம்மாவிடம் சிக்கி அவதிப்படும் காட்சிகளில் பதைபதைக்க வைக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் சாந்தினி தமிழரசன் கலக்கிவிடுகிறார். அவரது கதாபாத்திரம் திருப்புமுனை. மோனபத்ரே உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் அத்தனை பேரும் தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமியின் கேமராவில் காட்சிகள் திகிலூட்டுகின்றன. அஷ்வின் கிருஷ்ணாவின் இசை மிரட்டல்.
திகில் காட்சிகள் படத்துக்கு பலம். லாஜிக் மீறல்கள் தவிர்த்திருக்கலாம்.
வழக்கமான கதைக்களம் என்றாலும், வித்தியாசமான காட்சிகளை கொண்டு திகில் பயம் ஏற்படுத்தி திரும்பி பார்க்க வைத்திருக்கிறார், இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம். கிளைமேக்ஸ் திக்... திக்... திக்... ரகம். விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கலாம்.