தமிழகம் – கேரளா எல்லையில் இருக்கும் மலை கிராமம் ஒன்றில் ஒவ்வொரு 7 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூன் மாதத்தில் ஆண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். வனதேவதையின் சாபமே இதற்கு காரணம் என்று ஊர்மக்கள் அச்சப்படுகிறார்கள். இதற்கிடையே அந்த ஊருக்கு வரும் இன்ஸ்பெக்டர் சித்து, ஊர்மக்கள் சொல்லும் கதைகளை நம்ப மறுக்கிறார். இந்த சூழலில் ஒரு இளம்பெண் மாயமாகிறார். விசாரணையில் களமிறங்கும் சித்து ஒரு இளைஞர் மீது சந்தேகம் கொள்கிறார். அவரை தேடி அலையும் சூழலில், மாயமான இளம்பெண்ணின் தோழியும் காணாமல் போகிறார். இதனால் சித்து குழம்புகிறார்.
இந்த சூழலில் காணாமல் போன மூவரும் ஒரு இடத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்படுகிறார்கள். எந்தவிதமான தடயங்களும் இல்லாமல், மூன்று கொலை வழக்கை சித்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அவரது மனைவியும், ஒரு வாலிபரும் கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்த கொலைகளுக்கு பின்னணியில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் சித்து அதை கண்டுபிடித்தாரா? கொலைகளுக்கு என்ன காரணம்? என்பதை சொல்கிறது மீதி கதை.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் சித்து, முதல் படத்திலேயே அழுத்தமான நடிப்பை காட்டி கவருகிறார். அதிகம் பேசாமல், முக பாவனைகளிலேயே உணர்ச்சிகளை கடத்தும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.
சித்துவின் மனைவியாக நடித்திருக்கும் தர்ஷிகா, மலை கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் ரித்விகா, போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கல் ரவி, ஜெயக்குமார், அருள் டி.சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவருமே பொருத்தமான தேர்வு.
பி.கே.மணிகண்டனின் ஒளிப்பதிவும், சக்தி பாலாஜியின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.
யூகிக்க முடியாத காட்சிகளும், திருப்பங்கள் நிறைந்த காட்சிகளும் படத்துக்கு பலம். கடைசி வரை திரில்லிங் குறையாமல் திரைக்கதை நகருகிறது.
வழக்கமான கிரைம் - திரில்லர் கதை என்றாலும், புதுவிதமான பாதையில் பயணிக்க வைத்து, படம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார், இயக்குனர் பாலாஜி. கிளைமேக்ஸ் மிரட்டல்.