சென்னை,
'விலங்கு', 'மாமன்' படங்களை இயக்கி கவனம் ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜ், கதையின் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம். பாலாஜி சக்திவேல் தனது ஒரே மகன் பிரசாந்த் பாண்டியராஜை அரசு பணியில் அமரவைத்து அழகுபார்க்க துடிக்கிறார். பல அரசு தேர்வு தேர்வுகளை எழுதவும் வைக்கிறார். எதிலும் அவர் தேர்ச்சி பெறாமல் போக இறுதியில், தனது உறவினர் மூலமாக போலீஸ்காரராக்கி விடுகிறார்.
அரசு வேலைக்காக போலீசில் சேரும் பிரசாந்த் பாண்டியராஜ், காவல்துறையில் நடக்கும் அரசியலில் சிக்கி திணறி போகிறார். அனைவரது கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி அவமானங்களை சந்திக்கிறார்.
ஒரு கட்டத்தில் போலீஸ் வேலையே வேண்டாம் என்று பிரசாந்த் பாண்டியராஜ் முடிவு எடுக்கிறார். இத்தனை நாள் தன்னை அலட்சியமாக பார்த்த அனைவருக்கும் ஒரு பாடம் கற்றுத்தர வேண்டும் என்று சில விஷயங்களை செய்கிறார். அதுவே அவருக்கு மிகப்பெரிய சிக்கல்களை உண்டாக்கி விடுகிறது. அது என்ன? அந்த சிக்கலில் இருந்து அவர் மீண்டு வந்தாரா? என்பதே மீதி கதை.
அப்பாவித்தனமான கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்து, அசத்தல் நடிப்பை கொடுத்திருக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற ரீதியில் அவரது விஸ்வரூபம் பரவசப்படுத்துகிறது. நாயகிகளாக நடித்திருக்கும் நர்மிதா, அருள்ஜோதி, சாயா தேவி ஆகியோர் கொடுத்த வேலைக்கு குறைவில்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். சாயாதாவி கொஞ்சம் கூடுதலாக கவனிக்க வைக்கிறார்.
பாலாஜி சக்திவேல், கவுசல்யா ஆகியோரின் அனுபவ நடிப்பு பேசப்படுகிறது. அருள்தாஸ், ஹலோ கந்தசாமி என அனைவரின் நடிப்பிலும் குறைவில்லை. அசோக் குமாரின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்.-ன் பின்னனி இசையும் படத்துடன் நம்மை நகர்த்துகிறது. பரபரப்பு மிக்க காட்சிகள் படத்துக்கு பலம். முகம் சுழிக்கும் வார்த்தைகளுக்கு கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
காவல்துறையில் நடக்கும் அரசியலை அழுத்தமாக சொல்லி குட்டு வைத்ததுடன், காவல்துறை பணியில் உள்ள எதார்த்தங்களை உண்மைக்கு நெருக்கமாக சொல்லி கவனம் ஈர்த்திருக்கிறார், இயக்குனர்கள் பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன்.