தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். இவர் ‘நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மேலும் பிரபலமானார். விஜய் மில்டன் இயக்கத்தில் 'கோலிசோடா 3' படத்திலும் நடித்துள்ளார்.
எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் ‘போர்த் ப்ளோர்’ படத்தில் ஆரி அர்ஜுனன் நடித்துள்ளார். இந்த படத்தில் தீப்ஷிகா, பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘வைகை’, ‘தீர்க்கதரிசி’படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் எல். ஆர். சுந்தரபாண்டி.
சின்ன சின்ன தவறுகள் என்று நினைத்து செய்யும் செயல்கள் எப்படி வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கிறது என்பதை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. காதல், பொருளாதாரம், மாபியா, நிராகரிப்பு, காமெடி, உருக்கம், சைக்காலஜி, திரில்லர் என ஒரே படத்தில் அனைத்து விதமானவற்றையும் வெளிப்படுத்தும் திரைக்கதை இப்படத்தின் பலம். இப்படம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், ‘போர்த் ப்ளோர்’ திரைப்படம் நாளை(மார்ச் 20) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.