சென்னை,
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தை RJ Balaji இயக்கியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், வெளியான நாள்முதல் வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.
படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கோடை விடுமுறை காலத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட ‘கருப்பு’, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. படம் வெளியான பல வாரங்களுக்குப் பிறகும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திரையரங்கு வசூல் மூலம் மட்டும் இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் ‘கருப்பு’ முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், விரைவில் ரூ.500 கோடி வசூலை எட்டும் என்ற எதிர்பார்ப்பும் திரையுலக வட்டாரங்களில் நிலவுகிறது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது ‘கருப்பு’ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதன்படி, ‘கருப்பு’ திரைப்படம் விரைவில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திரையரங்குகளில் பார்க்கத் தவறிய ரசிகர்கள் ஓடிடி வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.