நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, வடகரையாத்தூர் அருகே உள்ள ஜேடர்பாளையத்தில் ஸ்ரீ ஆனந்த ஈஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு, 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக கோவில் வளாகத்தில் 108 வலம்புரி சங்குகளில் புனித நீர் ஊற்றி, பல்வேறு வகையான பூக்களை வைத்து பூஜை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆனந்த ஈஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சங்குகளில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஜேடர்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆனந்த ஈஸ்வரரை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.