தேரோட்டம் 
ஆன்மிகம்

சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

சேலம்,

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் இன்று, தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

ஆடித்திருவிழா

சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆடித்திருவிழா கடந்த மாதம் 21-ந்தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், சிறப்பு உற்சவங்கள் நடைபெற்றன.

கடந்த 4-ந் தேதி காலை சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்றைய தினம் இரவு முதல் கோவிலில் பொங்கல் வைத்தல் வைபவம் வைபவம் தொடங்கியது. மறுநாளும் (ஆகஸ்ட் 5) கோவிலில் விடிய, விடிய பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் உருளுதண்டம் போட்டும், மாவிளக்கு எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று 3-ம் நாளாக ஏராளமான பெண்கள் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பிறகு, கோவில் முன்பு அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேரில் அம்மன் எழுந்தருளியதும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். முதல் அக்ரஹாரம், தேர்வீதி, ஆனந்தா இறக்கம், வள்ளுவர் சிலை, பட்டை கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி இறக்கம், டவுன் போலீஸ் நிலையம் ரோடு வழியாக சென்ற தேர், மதியம் கோவிலை அடைந்தது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

நாளை (சனிக்கிழமை) அதிகாலை கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ந்தேதி சத்தாபரணம் மற்றும் திருவீதி உலாவும், மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.