திருத்தணி,
தமிழ்நாட்டில் முருக பெருமான் அருள் புரியும் அறுபடை வீடுகளில் திருத்தணி 5வது திருத்தலமாக திகழ்கிறது. இந்த கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தி, பயபக்தியுடன் தாங்கள் கொண்டுவரும் மலர் காவடிகளை முருக பெருமானுக்கு செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தி கொள்வார்கள்.
ஆகஸ்ட் 6-ந் தேதி ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா நடைபெற இருக்கிறது. ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்தப்படுகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் மலர் காவடிகள் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்படும். முருக பெருமானை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு தரிசன வழிகள் ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் முருகபெருமானுக்கு தலைமுடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவணபொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்லேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.