கன்னியாகுமரி,
ஆடிமாதம் கடைசி செவ்வாய்கிழமையையொட்டி அவ்வையார் அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு நைவேத்யங்களை படைத்து அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆடிமாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதம் ஆகும். இம்மாதங்களில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும், தடங்கல்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அவ்வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், கன்னியாகுமரி மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் பெண்கள் திரளாக அம்மனை தரிசனம் செய்தனர். ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்றும் பெண் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
இன்று காலையிலிருந்தே உள்ளூர் மற்றும் வெளியிடங்களிலிருந்து பெண்கள் குடும்பம் குடும்பமாக வாகனங்களில் வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்திலும், அருகில் உள்ள தோப்புகளிலும் அமர்ந்து, தாங்கள் கொண்டுவந்த பொருள்களைக் கொண்டு கூழ், கொழுக்கட்டை மற்றும் சர்க்கரை பொங்கல் தயார் செய்து அவ்வையார் அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதற்காக அம்மனுக்கு மதியம் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு நைவேத்யங்களை படைத்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் அங்குள்ள பிற சன்னதிகளிலும் வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவிலிலிருந்து தாழக்குடி மற்றும் செண்பகராமன்புதூர் வழியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதே போல குமரி மாவட்டத்திலுள்ள பிற அம்மன் கோவில்களிலும் ஆடி கடைசி செவ்வாயையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.