தங்கப் பல்லக்கில் அம்மா மண்டபம் சென்ற நம்பெருமாள் 
ஆன்மிகம்

ஆடிப்பெருக்கு.. அம்மா மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்

அம்மா மண்டபத்தில் காவிரி அன்னைக்கு சீர்வரிசை சமர்ப்பிக்கும் சுவாமி நம்பெருமாள், இரவு அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

திருச்சி,

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், ஆடி18 விழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள், இன்று அம்மா மண்டபத்தில் எழுந்தருளினார்.

நதிகள் மற்றும் நீர்நிலைகளை போற்றி வழிபடும் நாளான ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்த விழாவானது காவிரி கரையோர பகுதிகளில் விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வராத நிலையில், ஆங்காங்கே தேங்கி கிடக்கும் தண்ணீரில் நீராடி, ஆற்றங்கரைகளில் காவிரி தாய்க்கு பூஜை செய்து வழிபட்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் மாநகராட்சி சார்பில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக தண்ணீர் குழாயில் ஷவர் அமைக்கப்பட்டிருந்தது. அதில் பக்தர்கள் நீராடி, ஆடிப்பெருக்கு பூஜை செய்தனர். பின்னர் மஞ்சள் , குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பித்தனர். புதுப்பெண்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, தன்னுடைய கணவனின் கையால் கட்டிக்கொண்டனர்.

காவிரிக்கு சீர் கொடுக்கும் நிகழ்வு

ஆடிப்பெருக்கு நன்னாளில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி, அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளி காவிரியை தங்கையாக பாவித்து சீர் கொடுக்கும் நிகழ்வு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலையில், மூலஸ்தானத்தில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள், அம்மா மண்டபம் சென்றார். அங்கு, அஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் நம்பெருமாள், இன்று மாலை காவிரி அன்னைக்கு சீர்வரிசை சமர்ப்பிக்கிறார்.

பின்னர் இரவு அங்கிருந்து புறப்பட்டு, வெளியாண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.