ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் தேரோட்டம் 
ஆன்மிகம்

ஆடிப்பூர விழா... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் தேரோட்டம் கோலாகலம்

தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்று வரும் ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.

ஆடிப்பூர திருவிழா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் தேரோட்ட திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் ஆண்டாள்-ரெங்கமன்னார் வீதி உலா நடைபெற்று வந்தது. கடந்த 10-ந்தேதி 5 கருட சேவை நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயன திருக்கோல நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கிருஷ்ணன் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12 மணி வரை தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் தேரோட்டம்

தேரோட்டம்

விழாவில் சிகர நிகழ்ச்சியாக இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இன்று காலையில் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து உற்சவர்கள் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினர். அங்கு தீபாராதனை நடைபெற்றதும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு “கோவிந்தா.. கோவிந்தா” என்று பக்தி முழக்கம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோடும் வீதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, திருத்தேரில் வலம் வந்த ஆண்டாளையும் ரெங்கமன்னாரையும் தரிசனம் செய்தனர். தேரோட்டத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

அடிப்படை வசதிகள்

தேரோட்டத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர் மற்றும் சேவை சங்கங்கள் சார்பாக பல்வேறு இடங்களில் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக அடிப்படை வசதிகள், நடமாடும் கழிவறை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீயணைப்புத்துறையினர், சுகாதாரத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.