வளையல் அலங்காரத்தில் அங்காளம்மன் 
ஆன்மிகம்

2 லட்சம் வளையல்களால் அங்காளம்மனுக்கு அலங்காரம்

பூஜை செய்யப்பட்ட வளையல்கள், மஞ்சள், தாலி கயிறு மற்றும் பூ உள்ளிட்டவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடிப்பூர விழாவில் அம்மனுக்கு 2 லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

ஆடிப்பூர விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அருள்மிகு உள்பேட்டை ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் வேண்டுதலின் பேரில் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். முன்னதாக வளையல், தாலி, மஞ்சள் குங்குமம், பூ பழம் உள்ளிட்ட சீர் வரிசைகளை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து அங்காளபரமேஸ்வரிக்கு படையலிட்டனர்.

இவ்வாறு படையலிடப்பட்ட 2 லட்சம் வளையல்களைக் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, ‘ஓம் சக்தி.. பராசக்தி’ என பக்தி முழக்கமிட்டபடி அம்மனை வழிபட்டனர்.

பிரசாதம்

தொடர்ந்து சுமங்கலி பூஜை மற்றும் மாங்கல்ய பூஜை ஆகியவை நடந்தன. அதன்பின்னர் பூஜை செய்யப்பட்ட வளையல்கள், மஞ்சள், தாலி கயிறு மற்றும் பூ உள்ளிட்டவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஆடிப்பூர சிறப்பு பூஜையில் உளுந்தூர்பேட்டை மட்டுமின்றி அதனை சுற்றி உள்ள அரளி பாண்டூர், களமருதூர், நெமிலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.