வெள்ளிக்கவச அலங்காரத்தில் சனீஸ்வரர் 
ஆன்மிகம்

திருநள்ளாறில் சனீஸ்வரருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்

திருநள்ளாறு வருகை தந்த பக்தர்கள் நளன் தீர்த்த குளத்தில் கலித்தீர்த்த விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து பின்னர் சனீஸ்வரரை வழிபட்டனர்.

திருநள்ளாறு,

திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதி கொண்டு அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வார்கள்.

அவ்வகையில் நேற்று ஆடி மாத 4-வது சனிக்கிழமை மற்றும் வார இறுதி நாள் என்பதால் சாமி தரிசனம் செய்ய காலை முதலே பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். முன்னதாக அவர்கள் நளன் தீர்த்த குளத்தில் புனித நீராடி கலித்தீர்த்த விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து சனீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

வெள்ளிக்கவசம்

முன்னதாக சாமிக்கு பால், தயிர், சந்தனம், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெள்ளிக்கவசம் அளிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சனீஸ்வரருக்கு உகந்த எள்தீபம் ஏற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் சிரமமின்றி பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்ய திருநள்ளாறு போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல், இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.