சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவில் 
ஆன்மிகம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா- நாளை கொடியேற்றம்

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதனை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார்.

இத்தகைய நிகழ்வானது, ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தொடர்ந்து 12 நாட்கள் இவ்விழா நடைபெறும்.

கொடியேற்றம்

இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நாளை காலை கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 26-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு 11-ம் திருநாளான 28-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ரோஜாலிசுமதா, துணை ஆணையர் சுரேஷ் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT