சந்தன காப்பு அலங்காரத்தில் அரகண்டநல்லூர் பச்சையம்மன் 
ஆன்மிகம்

அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.

திருக்கோவிலூர்,

ஆடி மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அரகண்டநல்லூர் பச்சையம்மன் கோவிலில், அம்மன் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டின் ஆடி திருவிழா, ஆடி 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்றன. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர்.

கீழையூர் மாரியம்மன்

அதேபோல் திருக்கோவிலூர் கீழையூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலிலும் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.