சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா தேரோட்டம் இன்று நடக்கிறது. இதையொட்டி கோமதி அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவில் 7-ம் நாளான நேற்று முன்தி னம் இரவில் பூம்பல்லக்கில் கோமதி அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கின்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.