திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் 
ஆலய வரலாறு

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்

உலகளந்த பெருமாளை பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

கோவில்களில் சிறந்தது என்று சொல்லும் வகையில் பல்வேறு ஆன்மிக சிறப்புகள் பெற்ற தலம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில். மாகாபலியை வெல்ல வாமனர் திருவிக்கிரமனாக மூவுலகையும் ஈரடியால் அளந்த விஸ்வரூப கோலத்தில் அருள்பாலிக்கும் தலம்.

மூலவர்: திரிவிக்கிரம பெருமாள் வலக்கையில் சங்கும், இடக்கையில் சக்கரமும் தாங்கி தனது வலக்காலை உயரத்தூக்கி விண்ணை அளந்தபடி கிழக்கு நோக்கி நிற்கிறார்.

உற்சவர்: ஆயனர் என்றும் கோபாலன் என்றும் பெயர்.

தாயார்: பூங்கோல் நாச்சியார்.

தல தீர்த்தங்கள்: பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், சக்கர தீர்த்தம்,

விமானம்: ஸ்ரீகர விமானம்.

கிருஷ்ணரின் நித்திய சாந்நித்தியம் பெற்ற பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்து பெருமாளை பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். பேயார், பொய்கையார், பூதத்தார் என்னும் முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே பல தலங்களுக்கும் சென்று இறைவனை பாடி பணிந்து வந்தனர். பெருமாள் அவர்களை ஒன்று சேர்த்து வைக்க நினைத்தார்.

ஒருநாள் தற்செயலாக ஆழ்வார்கள் மூவரும் இவ்வூருக்கு வர நேரிட்டது. நல்ல இருட்டு நேரம். மழையும் பெய்துகொண்டிருந்தது. முதலில் வந்த ஆழ்வார் ஒரு வீட்டில் தங்குவதற்கு இடம் கேட்டார். ஒற்றை அறை கொண்ட அவ்வீட்டின் முன்புறம் ஒரு தாழ்வாரம் இருந்தது. மிக குறுகலான இடம். ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் வந்து விட்டால்...? மூன்று பேரும் நிற்கத்தான் வேண்டும். வீட்டு உரிமையாளர் முதலில் வந்தவருக்கு இடம் கொடுத்தார். அவர் படுக்கப்போகும் சமயம் இரண்டாமவர் ‘நாராயணா நாராயணா’ என்றழைத்துக் கொண்டு வந்தார்.

இருவரும் அமர்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் மூன்றாமவர் வந்துவிட்டார். மூவரும் எழுந்து நின்றனர். மூன்று பேரும் தாராளமாக நிற்கலாம். அப்போது இருட்டு வேளையில் இவர்களுக்கிடையே இன்னொருவரும் புகுந்துகொண்டு நெருக்கத் தொடங்கி விட்டார். ஆழ்வார்கள் திகைத்தனர். யார் அது? யார் அது? பெருமாள் பிராட்டியுடன் காட்சியளித்தார். ஆழ்வார்கள் மூவரும் மெய்மறந்து ஆளுக்கொரு அந்தாதி பாடி அரங்கனை பணிந்தனர்.

ஒருவரை ஒருவர் புரிந்துகொன்டு ஒன்றாக சிறிதுகாலம் தலயாத்திரை செய்தனர். இப்படி ஆழ்வார்களை ஒன்று சேர்த்து வைத்த பெருமாள் இவரே. ஸ்ரீவேதாந்த தேசிகன் தேகளீச ஸ்துதியை இந்த கோவிலில்தான் இயற்றினார்.

இத்தலத்திற்கு விழுப்புரத்தில் இருந்து அடிக்கடி பஸ்கள் செல்கின்றன. கடலூரில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் கூட பஸ்கள் செல்கின்றன. வேலூர் மார்க்கமாக செல்லும் திருச்சி- சித்தூர் பஸ்களும் இத்தலத்தின் வழியாக செல்கின்றன. விழுப்புரம்-காட்பாடி ரெயில் பாதையில் உள்ள திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் இறங்கியும் இரண்டு மைல் தொலைவிலுள்ள ஊரை சென்றடையலாம்.

SCROLL FOR NEXT