குத்துவிளக்கு பூஜை 
ஆன்மிகம்

ஆனி கொடை விழா.. குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

எட்டாம் நாள் திருவிழாவையொட்டி, காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

தூத்துக்குடி,

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி பெருந்திருவிழா (கொடை விழா) கடந்த 14ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கொடைவிழாவில் பக்தி சொற்பொழிவு, வில்லிசை, இன்னிசை கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, பக்தி பாடல் நிகழ்ச்சி, பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில், எட்டாம் நாள் திருவிழாவான நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கிளாரினெட் இன்னிசையும், நாதஸ்வர இன்னிசை, பக்தி பாடல் நிகழ்ச்சியும் நண்பகல் 12 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.

தீர்த்தவாரி

மதியம் 1மணிக்கு முத்து மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் தாமிரபரணி ஆற்றங்கரையில் தீர்த்தவாரி (திருமஞ்சனம்) முடித்து சப்பரத்தில் அம்பாளுடன் எழுந்தருளிய நாராயணனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அங்கிருந்து நாராயணர் சப்பரத்தில் கோயில் மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் முன்பு வந்தடைந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கம் சார்பில் 1008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பூஜை பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.